திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.56 திருக்கோளிலி (திருக்குவளை) - திருக்குறுந்தொகை
மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
1
முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே.
2
வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
3
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.
4
அல்ல லாயின தீரும் அழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.
5
ஆவின் பால்கண் டளவில் அருந்தஅப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.
6
சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற்
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.
7
மால தாகி மயங்கு மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனங்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.
8
கேடு மூடிக் கிடந்துண்ணும் நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திருக் கோளிலி ஈசனைப்
பாடு மின்னிர வோடு பகலுமே.
9
மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.57 திருக்கோளிலி (திருக்குவளை) - திருக்குறுந்தொகை
முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.
1
விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.
2
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளி லியரன் பாதமே கூறுமே.
3
விழவி னோசை ஒலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலி
குழக னார்திருப் பாதமே கூறுமே.
4
மூல மாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்
கால னாகிய காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
சூல பாணிதன் பாதந் தொழுமினே.
5
காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.
6
வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
7
நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
8
மாலும் நான்முக னாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.
9
அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com